Thursday, September 23, 2010

பெண் மானும் கவி நானும்!!!


பறவைகள் பாட்டுப் பாடும்
மாலை நேரம்;
தென்றல் வந்து வீசும் நேரம்
இந்த நேரம்;
தேனிசையில் நடைபோடும்
பெண் மானும்-
பெண் மான் பின் செல்லும்
கவி நானும்;

குயிலோசை இனிது என்றேன்,
குயில் எப்படி இருக்கும் என்றாள்;
மைபூசிய கருமை நிறம்- இது நான்
ஆக குக்கூ என கூவுவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
கரையும் காகமும் கருப்பு என்றேன்,
ஆக காகா என கரைவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
நீள கூந்தலும் கருப்பு என்றேன்;
ஆக நீளமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
திடமான கருங்கல்லும் கருப்பு என்றேன்;
ஆக திடமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
உருவத்தில் பெரிய யானையும் கருப்பு என்றேன்;
ஆக பெரியதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
எரியக்கூடிய நிலக்கரியும் கருப்பு என்றேன்;
ஆக எரிவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
மழை தரும் கருமுகிலும் கருப்பு என்றேன்;
ஆக மழை கருப்பா என்றாள்;

இல்லை,
வட்டக் கண்ணின் கருமணி கருப்பு என்றேன்;
ஆக வட்டமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
தொடமுடியாத நிழலும் கருப்பு என்றேன்;
ஆக தொடமுடியாததெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
வெளிச்சமற்ற இருட்டும் கருப்பு என்றேன்;
வெளிச்சம் என்பது என்ன? என்றாள்;
பிரகாசமான ஒளி என்றேன்;
ஒளி என்பது என்ன? என்றாள்;
விவரிக்க தெரியவில்லை என்றேன்;

வாயின் முத்துக்கள் சிதற
நான் பார்வையற்ற குருடு- நீ
பார்வையிருந்தும் குருடா என நகைத்தாள்!!

ஆம் குருடன் தான்-அவளின்
ஊமை விழிகளுக்கு விளக்கமுடியா
அறிவுக் குருடன்!!!